Tuesday, October 1, 2013

தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு

          முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட் கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
         மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், ஜூலை 21 ல், தேர்வு நடந்தது. &'பி&' வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத, 150 கேள்விகள் இருந்தன; இதில், 47 கேள்விகளில், அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
          ஏற்கனவே, வழக்கு விவாதத்தின் போது நீதிபதி, "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இதில், 8002 பேருக்கு, அச்சுப்பிழையுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசிடம் விவரம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்றார்.
           "மொத்தம் 150 வினாக்களில், 40 வினாக்கள் பிழையாக உள்ளன. பிழையான வினாக்களை நீக்கி விடுகிறோம். மீதம், 110 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்" என டி.ஆர்.பி.,சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜெ.ஜெயகுமாரன் ஆஜரானார்.
           மொத்தம், 150 வினாக்களில், &'பி&' வரிசை வினாத்தாளில் பிழையான, 40 வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்கலாம். &'பி&' வரிசை வினாத்தாளின்படி பதில் எழுதியவர்களுக்கு, மொத்தம், 110 மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம். இதேபோல், அனைத்து (ஏ,சி,டிவரிசை) வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்களுக்கும், 110 மதிப்பெண் அடிப்படையில், மதிப்பீடு செய்து, முடிவை வெளியிடலாம். தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை என, அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
           தேர்வு எழுதியவர்களுக்கு, டி.ஆர்.பி., அநீதி இழைத்துள்ளது. போட்டித்தேர்வில், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். கருணை மதிப்பெண், 40 வழங்கினால், அந்த வினாக்களை எழுதியவர்கள் மட்டும் பயனடைவர். மொத்த மதிப்பெண்ணை, 110 ஆக குறைத்து, விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால், தேர்வின் நோக்கம் நிறைவேறாது. இதற்கு ஒரே தீர்வு, மறு தேர்வு நடத்துவது தான். இவ்வாறு, முடிவெடுக்கும் நிலைக்கு, என்னை டி.ஆர்.பி., தள்ளியுள்ளது.
           இதபோல், டி.ஆர்.பி.,க்கு எதிராக, 2012ல், ஒரு வழக்கு வந்தது. "வரும் காலங்களில், வினாத்தாளில் பிழை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும்" என டி.ஆர்.பி.,உறுதியளித்தது. அதை டி.ஆர்.பி., காப்பாற்றவில்லை. தற்போது, அரசுத்தரப்பு பரிந்துரையால், நன்றாக தேர்வு எழுதியவர்களும் பாதிக்கப்படுவர். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. டி.ஆர்.பி., விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டும்.
             ஏற்கனவே பயன்படுத்திய, ஹால்டிக்கெட்டுகளை ஆன்-லைன் மூலம் வழங்கலாம். புதிதாக விண்ணப்பங்கள் வினியோகித்து, அதன் அடிப்படையில் யாரையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment