Tuesday, October 8, 2013

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பயிற்சி

இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


          1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.


          எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

              இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

                இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

            மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.

                காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.

          இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

                ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment