Wednesday, February 5, 2014

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

             குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 
         மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி தரப்படுகிறது. குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள், அவர்களை எப்படிக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 
       யுனிசெஃப் மற்றும் துளிர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாலியல் கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும், புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொள்ளுதல், எது பாலியல் கொடுமை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.    
  பிப்ரவரி 6,7-ல் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு  சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்பிறகு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்த மாதத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்தார்

No comments:

Post a Comment