Monday, November 4, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு



கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மத்தூர், ஒசூர், தென்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார்.
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது கருத்துரையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இயக்கச் செயல்பாடுகள் குறித்தும், மாநில,மாவட்ட, வட்டார உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் உணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1.   மாவட்டத் தலைவர்      :    சா. இராஜேந்திரன்,உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அத்திகானூர்
2.   மாவட்டச் செயலாளர்    :    செ. இராஜேந்திரன்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர்.
3.   மாவட்டப் பொருளாளர்   :    த. செல்வம், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அ.பள்ளத்தூர்
4. மாவட்ட மகளிர் அணி    :   பொ. கௌரம்மாள்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி.
5.   மாவட்ட து. தலைவர்    :    இரா.இராமாண்டவர்,
உதவி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி
6. மாவட்ட து. செயலாளர்:  பா.ஜியாவுல்லா, உதவி ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, மத்தூர்
7.   மாவட்ட தணிக்கைக் குழு :   சி. மாதையன், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, மாடற அள்ளி

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து இயக்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின்,  அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றினார். அதில் அவர் ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட வரலாறு பற்றியும், இன்றைய ஆசிரியர்கள் பெற்று வரும் பல்வேறு உரிமைகள், கடந்த கால ஆசிரியப் போராளிகளின் தியாகத்தால் பெற்றுத் தந்தவை என்றும் கூறினார். மேலும் கல்வித் துறையின் இன்றைய இக்கட்டான சூழலில் ஆசிரியர்கள் அதிக விழிப்போடும், கடமை உணர்வோடும் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
தேர்தலை தமிழக ஆசிரியர் கூட்டணியின், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இரா. சென்னகேசவன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேலம் ஊரகம் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச. மதியழகன் ஆகியோர் ஆணையாளர்களாக செயல்பட்டு நடத்தினர்.
நிகழ்வில் மத்துர், ஒசூர், தென்கனிக்கோட்டை கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும், ஊத்தங்கரை, மத்தூர், ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் ஒசூர் வட்டாரச் செயலாளர் திருமதி வே. அருள் எழிலரசி  அனைவருக்கும் நன்றி கூறினார்.


















Friday, October 11, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழுக் கூட்டம்



தமிழக ஆசிரியர் கூட்டணி, ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று (11.10.2019) ல் ஊத்தங்கரையில் நடைபெற்றது.

ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் தலைவர் திரு கி. நாகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வட்டாரக் கிளையின்  செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். 

சிறப்பு அழைப்பாளராக மத்தூர் கல்வி மாவட்டக் கிளையின், மாவட்டச் செயலாளர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவர் தனது சிறப்புரையில் இன்றைய தொடக்கக் கல்வித் துறையின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும், அரசு மற்றும் கல்வித் துறையால் புதுமை என்ற பெயரால் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் பல்வேறு பணிச் சுமைகளால் மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரம் பெருமளவு பாதிக்கப்படுவது குறித்து தமது கவலையை பகிர்ந்துக் கொண்டதோடு, கல்வித் துறையோடு தொடர்பில்லாத பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள்  தாம், கல்வியில்/பள்ளியில்/ஆசிரியர்களிடையே பல புதிய மாற்றங்களை கொண்டு வருகிறோம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும்,  அவர்களின் கருத்துக்கள் உள்ளடக்கிய பயிற்சிகளையும், திட்டங்களையும் அப்படியே ஏற்று அரசு பள்ளிகளில் மட்டும் புகுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும் அரசு பள்ளிகளில் துவக்கப்பட்ட மழலையர் வகுப்புகளுக்கு கற்பிக்க துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை கட்டாய மாறுதல் மூலமும், மாற்றுப் பணி மூலமும் நியமனம் செய்யப்பட்டவர்களை உடனடியாக திரும்ப சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கோ அல்லது தேவையான இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திலோ நியமிக்க வேண்டுமெனவும், தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று, இன்னும் வேலையில்லாமல் இருப்பவர்களை அப்பணியிடத்தில் நியமனம் செய்து கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொண்டார்.

 மேலும் ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஓராண்டுக்கும் மேலாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் 47 இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடம் உள்ளதை சிறப்பு கவனம் கொண்டு உடன் நிரப்பிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1
தற்போது ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஏற்கனவே 47 இடைநிலை ஆசிரியர் (தகுதியுள்ள) பணியிடம் காலியாக உள்ளதால் ஒன்றிய துவக்கக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இக்காலிப் பணியிடங்களை நிரப்பி ஒன்றியத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கல்வித் துறையையும், மாநில தொடக்கக் கல்வித் துறையையும் கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 2.
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்க ஓர் இடைநிலை ஆசிரியர் கூட இல்லாத நிலையில், இதுவரையில் மாற்றுப் பணியில் கூட யாரையும் நியமிக்காமல் உள்ளதற்கு இச்செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதோடு, உடன் மாற்றுப் பணியில் இடைநிலை ஆசிரியர் நியமித்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றலுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தீர்மானம் : 3. 
     கடந்த ஜூலை 2019 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி 5%ஐ மத்திய அரசு அறிவித்த நிலையில்  தமிழக அரசும் உடனடியாக வழங்க  அரசை கேட்டுகொள்ளல்.

தீர்மானம் : 4.
     தமிழக கல்வித் துறையில் இன்று பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் திறன்பேசியை தொடர்ந்து வகுப்பறையில் பயன்படுத்தி கற்பிக்க  வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர்களுக்கும் தரமான, கற்றல்/கற்பித்தல் செயலிகள் பதிவிரக்கம் செய்யப்பட்ட விலையில்லா திறன்பேசியை வழங்கிட தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்
தீர்மானம் : 5.
     தமிழகத்தில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி  அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசு துவக்கப் பள்ளிகள் அனைத்தும் புதிய பொழிவு பெறும் பொருட்டும், மாணவர்களை கவர்ந்து ஈர்க்கும் பொருட்டும் அரசின் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் படி அனைத்து பள்ளிக் கட்டிடங்களுக்கும் வர்ணம் பூசிடவும், பலவண்ண ஓவியங்கள் வரையவும், தமிழக கல்வித் துறை முயற்சி மேற்கொண்டு, தமிழக அரசை வலியுறுத்த கேட்டுக் கொள்ளல்.

தீர்மானம் : 7.
     பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும் தற்போது இணைய மின்னஞ்சல் மற்றும் குறுஞ் செய்திகள் வழியே தற்போது வழங்க வேண்டி உள்ளதாலும், மாணவர்களுக்கு இணைய வளங்கள் மூலமே கற்றல்/ கற்பித்தலை நிகழ்த்த வேண்டி உள்ளதாலும் அனைத்து துவக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் அகன்ற கற்றை இணைய இணைப்பு வசதியுடன் கூடிய மடிக்கணினி வழங்கிட தொடக்கக் கல்வித் துறையைக் கேட்டுகொள்ளல். 

(இயக்க சார்பு தீர்மானங்கள்)

தீர்மானம் : 1.
     இயக்க சட்ட விதிமுறைகளின் படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ஜனநாயக முறைப்படி நடத்தப்பட வேண்டிய வட்டார மற்றும் மாவட்ட கிளைத் தேர்தல்களை இம்மாத இறுதிக்குள் முறையாக திட்டமிட்டு நடத்திட முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் : 2.
     நவம்பர் 2019 மாதத்திற்குள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் உள்ளிட்ட தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருப்பாளர்கள் அனைவரையும் அழைத்து வட்டாரக் கிளையின் சார்பில் முப்பெரும் விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

இறுதியில் வட்டார செயற்குழு உறுப்பினர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

     கூட்டத்தில், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, கல்வி மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம் செயற்குழு  உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, இராமாண்டவர், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
                                                                                           
                                                                                            

Sunday, June 23, 2019

மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம்.

 


தமிழக ஆசிரியர் கூட்டணி மத்தூர் கல்வி மாவட்டக் கிளையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் இன்று ஊத்தங்கரையில் நடைபெற்றது.
மத்தூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச.. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு ஊத்தங்கரை வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட மாவட்ட மற்றும் வட்டாரப் பொருப்பாளர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் வெளிப்படைத் தன்மையோடு, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்கா வகையில் நடைபெற கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகள் திறந்து ஒரு மாதம் முடிய உள்ள சூழலில் இன்னமும் மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்களும் பாடக் குறிப்பேடுகள், சீருடைகள்  உள்ளிட்ட எவ்வித பொருட்களும் வழங்கப்படவில்லை, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு பாடநூல்களை மட்டும் வழங்கிவிட்டு பிற வகுப்புகளுக்கு வழங்காத நிலையில் ஆசிரியர்கள் இணையத்தில் இருந்து பாடநூல்களின் பிரதிகளை பதிவிரக்கம் செய்து பாடங்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள் எதுவும் அளிக்கப்படாததால் மாணவர்களின் கற்றல்/கற்பித்தலில் பெரும் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்வதாகவும், கல்வித்துறை போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளையும், சீருடைகளையும் வழங்கி அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை காத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
தற்போது ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியத்தில் ஏற்கனவே அதிக அள்விலான  இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், துவக்கக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளுக்கு மாறுதல் செய்ததால் காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளது. எனவே நடைபெற உள்ள பொது மாறுதலில் அவர்கள் அனைவரையும் மீள தாய்ப் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, மழலையர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பிட கல்வித்துறை முன்வர வேண்டும்.
தீர்மானம் : 2.
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் துவக்க வகுப்புகளில் மட்டும் 30க்கும் அதிக மாணவர்கள் இருந்தும்,  கடந்த ஆண்டு ஜூன் முதல் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் கூட இல்லாத நிலையில், இதுவரையில் மாற்றுப் பணியில் கூட யாரையும் நியமிக்காமல் உள்ளதற்கு இச்செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதோடு, உடன் மாற்றுப் பணியில் இடைநிலை ஆசிரியர் நியமித்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றலுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தீர்மானம் : 3. 
     ஆசிரியர் / அரசு ஊழியர்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்திய போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துறை சார்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்ப பெறப்பட வேண்டும்.
தீர்மானம் : 3. 
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பெற்றதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுகொள்ளல்.
தீர்மானம் : 4.
     இடைநிலை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு ஊதியக் குழுவில் ஏற்பட்ட  ஊதிய நிர்ணய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்

தீர்மானம் : 5.
     தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கற்றல்/கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு வசதிகளையும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டல்.
தீர்மானம் : 7.
     2019 க்கான உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து,  ஜூன் மாத இறுதிக்குள் முடித்து உடன் மாவட்ட/ மாநில பங்குத் தொகையை செலுத்துதல்.
தீர்மானம் : 8.
     ஆகஸ்டு மாதத்திற்குள் வட்டாரக் கிளைகளின் தேர்தல்களை முடித்து, அக்டோபர் மாதம் மாவட்ட தேர்தல் நடத்திட ஆயத்தமாதல்.
தீர்மானம் : 9.
     மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் முன்னோடி இயக்க செயல் வீரருமான திருமதி க. தமிழ்ச்செல்வி அவர்களின் கணவர் திரு செல்லகுமார் அவர்கள் மரணம் அடைந்ததற்கு மிகுந்த துயரத்தை வெளிப்படுத்தி அவரின் ஆன்மா சாந்தி அடைய அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் இரா. சாந்தா, ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் கி. நாகேஷ்,  வட்டாரப் பொருளாளர் பொ. கௌரம்மாள், மத்தூர் வட்டாரச் செயலாளர் இரா. தனசேகர், பொருளாளர் இரா. ரேகா, செயற்குழு உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, ச.சித்ரா, இரா.சாந்தா, க. சரஸ்வதி, பூ .இராம்குமார், பன்னீர்செல்வம், இராஜா, சீனிவாசன்,  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.