Monday, April 9, 2018

கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.



கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கூட்டுறவு சங்க தேர்தல் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாகவும், அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பலருடைய மனுக்களை தள்ளுபடி செய்து அ.தி.மு.க.வினரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகள் முதல்கட்ட தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரை தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட தேர்தலுக்கு தயாராகி உள்ளனர். விதிமீறல்களும், முறைகேடுகளும் நடப்பது தெரிந்தும், புகார்கள் வந்தும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம். அந்த நடவடிக்கைகள் செல்லாது என்று அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வீராகதிரவன், “தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார். பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகின்றன. விதிமீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் சமீபத்தில் 142 சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று வாதாடினார். நடவடிக்கைகளுக்கு தடை விசாரணை முடிவில் நீதிபதிகள், “கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும். வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது பற்றிய விவரங்களையும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் கமிஷனர் விரிவான பதில் மனுவை வருகிற 11-ந் தேதி (அதாவது நாளை) தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். கூட்டுறவு தேர்தல் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் மேற்கொண்டு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, April 5, 2018

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்....


     சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள்கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலைகல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன.இதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்தமுதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்குனர் இருக்கிறார்.இதைப்போல தொடக்க கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 800 நடுநிலை பள்ளிகளும் உள்ளன.

   இந்த பள்ளிகளை கண்காணிக்க உதவி கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க இணை இயக்குனர்களும் உள்ளனர். இணை இயக்குனர்களை மேற்பார்வை செய்ய இயக்குனர் இருக்கிறார்.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்ட பயிற்சி நிறுவனங்களும், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன.

         அரசு தேர்வுத்துறை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் வருகிறது.இந்த துறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதால், அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். எனவே இதில் பல துறைகளை இணைத்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.அந்தவகையில் தொடக்ககல்வித்துறை இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை ஒழிக்கப்படும் என்று தெரிகிறது.

          மேலும் தமிழ்நாடு அளவில் 6 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு எனஇயக்குனர்கள் அமர்த்தப்படுவர்.டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மட்டும் இருப்பார். அவர்தான் அனைத்து மண்டல இயக்குனர்களையும் கண்காணிப்பார். பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர அனைத்து இயக்குனர்களும் சென்னையை விட்டு வெளியே போய் பதவி வகிப்பார்கள்.

  ஆசிரியர் தேர்வு வாரியம் வருடத்திற்கு குறைந்த அளவில்தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியமும் கலைக்கப்படும் என தெரிகிறது. அவற்றின் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

         இதைப்போல உதவி கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் ஒழிக்கப்பட்டு அவர்களுக்குவேறு பணிகள் வழங்கப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இப்போது உள்ள அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும்.

        இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.