Wednesday, February 5, 2014

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.

             குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார். 
         மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி தரப்படுகிறது. குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்னைகள், அவர்களை எப்படிக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 
       யுனிசெஃப் மற்றும் துளிர் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சியின் போது ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாலியல் கொடுமைக்குள்ளானது குறித்து தெரியவந்தால் அவற்றை எவ்வாறு அணுக வேண்டும், புகார் அளிப்பதற்கான வழிமுறைகள், குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொள்ளுதல், அவர்களுக்குள்ள உரிமைகளைத் தெரிந்து கொள்ளுதல், எது பாலியல் கொடுமை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.    
  பிப்ரவரி 6,7-ல் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு  சென்னையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்பிறகு, மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும். இந்த மாதத்துக்குள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்தார்

Tuesday, February 4, 2014

ஏழாவது ஊதியக்குழு தலைவர் - உறுப்பினர் நியமனத்துக்கு பிரதமர் ஒப்புதல்.


       ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார்.50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.

           ரத்தின் ராய், மீனா அகர்வால் ஆகிய இருவரும் இக்குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பர்.முன்னதாக 7-வது ஊதிய குழு அமைப்பதற்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ஒப்புதல் தந்திருந்தார். ஊதிய உயர்வு குறித்த பரிந்துரைகளை தர இக்குழுவுக்கு 2ஆண்டு அவகாசம் தரப்பட்டுள்ளது.இது தரும் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும். 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் 2006-ம் ஆண்டு அமலுக்கு வந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு - மதிப்பெண் குறைப்பு - 30 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி

                டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி.
                   ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
             இதனால், தேர்வர்கள், மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.
           கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் இன்று டி.ஆர்.பி  இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம். ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இப்போது, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கடந்த, 2012 தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெறாததால் அவர்கள் பிரிவில் 400 இடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். தற்போது, 5 சதவீத சலுகை அளிக்கப்பட்டிருப்பதால் இட ஒதுக்கீடு பிரிவினரின் தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயரும். "முதல்வர் அறிவிப்பு தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படும்" என பள்ளிக் கல்வித் துறை செயலர் சபிதா அவர்கள் நேற்று தெரிவித்தார்.

டிட்டோஜாக் கூட்டம் முடிவுகள் – 04.02.2011

Photo

       
               இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 6.3.2014 -வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 02.02.2014 மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜேக் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது

1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த அறிவிப்பு அனுப்ப முடிவு
2.டிட்டோ ஜாக் அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்.
3.இல்லையேல்  06.03.2014 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு

Monday, February 3, 2014

”இயக்கப் பொறுப்பாளர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சிக் கருத்தரங்கம்”

தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பாக ”இயக்கப் பொறுப்பாளர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சிக் கருத்தரங்கம்” வரும் 09.02.2014 அன்று ஒசூரில் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்........

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

            டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

      சட்டப் பேரவையில் இதுகுறித்து முதல்வர் கூறியதாவது: டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
        இதன்படி, இனி நடைபெறும் டி.இ.டி., தேர்வுகளில், தேர்வர்கள் 55% மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இந்த சலுகை, கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட டி.இ.டி., தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.
       டி.இ.டி., தேர்வானது, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுவதாகும். இதில் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகள் உண்டு. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு முதல் தாளும், உயர்நிலைக் கல்வி ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாளும் அடங்குபவை.
       இந்த 2 தேர்வுகளிலுமே, சம்பந்தப்பட்ட தேர்வர்கள், குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள்(60%) பெற்றால்தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்ற நிலை இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்தவொரு மதிப்பெண் சலுகையும் வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. கடும் எதிர்ப்புகளையடுத்து, தற்போது, பொதுப்பிரிவை தவிர்த்த இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
         சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் எஸ்.சி., எஸ்.டி.,எம்.பி,சி., சிறுபான்மையின மாணவர்கள் 55 % மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி எனவும் ,.2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

Sunday, February 2, 2014

டிட்டோஜேக் மாவட்ட பேரணி



மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பிலான  கிருஷ்ணகிரி மாவட்ட கோரிக்கை பேரணி இன்று (02.02.2014) நடைபெற்றது.
கிருஷ்ணகிரி ஆர்.சி. பாத்திமா பள்ளி அருகில் இருந்து துவங்கிய பேரணியில் 1356 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 2572 ஆசிரியர்கள் பங்கேற்றனர். சுமார் 3 கி.மீ தூரம் நடைபெற்ற பேரணி, இறுதியில் கார்னேசன் திடலில் நிறைவடைந்தது.
பேரணிக்கு திரு மா. கிருட்டிணமூர்த்தி தலைமை தாங்கினார், திரு இலா. தியோடர் ராபின்சன் பேரணியைத் துவக்கி வைத்தார், திரு வ.மி. ஹபிபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.
பேரணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியபடி அனைத்து ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர். மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் இருந்தும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு டி. வெங்கடேசன் அவர்களிடம் அனைத்து சங்கப் பொருப்பாளர்களால் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்ட்து.