Sunday, July 12, 2015

அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை

      கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட, தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
       தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.


      கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,500 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்7,000 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, 10 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஓய்வு:

       கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால்,அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.

நிர்பந்தம்:

    இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:

    கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். 
          ஆனால், அங்கு, எட்டு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும். தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால், மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். அதே சமயம், பல ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும். அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால், காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும் வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment