Sunday, June 23, 2019

மாவட்ட சிறப்பு செயற்குழுக் கூட்டம்.

 


தமிழக ஆசிரியர் கூட்டணி மத்தூர் கல்வி மாவட்டக் கிளையின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் இன்று ஊத்தங்கரையில் நடைபெற்றது.
மத்தூர் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச.. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு ஊத்தங்கரை வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட மாவட்ட மற்றும் வட்டாரப் பொருப்பாளர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்தனர்
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில் நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் வெளிப்படைத் தன்மையோடு, எவ்வித புகாருக்கும் இடம் அளிக்கா வகையில் நடைபெற கல்வித்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும், பள்ளிகள் திறந்து ஒரு மாதம் முடிய உள்ள சூழலில் இன்னமும் மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்களும் பாடக் குறிப்பேடுகள், சீருடைகள்  உள்ளிட்ட எவ்வித பொருட்களும் வழங்கப்படவில்லை, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு பாடநூல்களை மட்டும் வழங்கிவிட்டு பிற வகுப்புகளுக்கு வழங்காத நிலையில் ஆசிரியர்கள் இணையத்தில் இருந்து பாடநூல்களின் பிரதிகளை பதிவிரக்கம் செய்து பாடங்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள் எதுவும் அளிக்கப்படாததால் மாணவர்களின் கற்றல்/கற்பித்தலில் பெரும் இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்வதாகவும், கல்வித்துறை போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மாணவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளையும், சீருடைகளையும் வழங்கி அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை காத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
தற்போது ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியத்தில் ஏற்கனவே அதிக அள்விலான  இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், துவக்கக் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளுக்கு மாறுதல் செய்ததால் காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளது. எனவே நடைபெற உள்ள பொது மாறுதலில் அவர்கள் அனைவரையும் மீள தாய்ப் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, மழலையர் கல்வி முடித்துள்ள ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பிட கல்வித்துறை முன்வர வேண்டும்.
தீர்மானம் : 2.
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் துவக்க வகுப்புகளில் மட்டும் 30க்கும் அதிக மாணவர்கள் இருந்தும்,  கடந்த ஆண்டு ஜூன் முதல் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் கூட இல்லாத நிலையில், இதுவரையில் மாற்றுப் பணியில் கூட யாரையும் நியமிக்காமல் உள்ளதற்கு இச்செயற்குழுக் கூட்டம் கண்டனம் தெரிவிப்பதோடு, உடன் மாற்றுப் பணியில் இடைநிலை ஆசிரியர் நியமித்து அப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றலுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தீர்மானம் : 3. 
     ஆசிரியர் / அரசு ஊழியர்கள் வாழ்வாதாரத்திற்காக நடத்திய போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துறை சார்பிலான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்ப பெறப்பட வேண்டும்.
தீர்மானம் : 3. 
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பெற்றதன் அடிப்படையில் நடைமுறையில் உள்ள பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுகொள்ளல்.
தீர்மானம் : 4.
     இடைநிலை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு ஊதியக் குழுவில் ஏற்பட்ட  ஊதிய நிர்ணய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்

தீர்மானம் : 5.
     தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கற்றல்/கற்பித்தல் துணைக் கருவிகள் மற்றும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு வசதிகளையும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டல்.
தீர்மானம் : 7.
     2019 க்கான உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து,  ஜூன் மாத இறுதிக்குள் முடித்து உடன் மாவட்ட/ மாநில பங்குத் தொகையை செலுத்துதல்.
தீர்மானம் : 8.
     ஆகஸ்டு மாதத்திற்குள் வட்டாரக் கிளைகளின் தேர்தல்களை முடித்து, அக்டோபர் மாதம் மாவட்ட தேர்தல் நடத்திட ஆயத்தமாதல்.
தீர்மானம் : 9.
     மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் முன்னோடி இயக்க செயல் வீரருமான திருமதி க. தமிழ்ச்செல்வி அவர்களின் கணவர் திரு செல்லகுமார் அவர்கள் மரணம் அடைந்ததற்கு மிகுந்த துயரத்தை வெளிப்படுத்தி அவரின் ஆன்மா சாந்தி அடைய அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இறுதியில் மாவட்டப் பொருளாளர் திரு த. செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் இரா. சாந்தா, ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் கி. நாகேஷ்,  வட்டாரப் பொருளாளர் பொ. கௌரம்மாள், மத்தூர் வட்டாரச் செயலாளர் இரா. தனசேகர், பொருளாளர் இரா. ரேகா, செயற்குழு உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, ச.சித்ரா, இரா.சாந்தா, க. சரஸ்வதி, பூ .இராம்குமார், பன்னீர்செல்வம், இராஜா, சீனிவாசன்,  உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.



















No comments:

Post a Comment