Wednesday, July 13, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 மதிப்புமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் - தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்திப்பு.....

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 மதிப்புமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் நமது இயக்கப் பொறுப்பாளர்கள் சந்திப்பு,  இனிய அணுகுமுறையினை பெற்றுத்தந்த சந்திப்பாக அமைந்தது... மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்...*


 *இன்று(13.07.3022) மதியம்  12.00  மணியளவில் முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அழைப்பின் பேரில் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,  மாநிலத் தலைவர் திரு.மா.நம்பிராஜ், பொதுச்செயலாளர் திரு அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் திரு க.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். சந்திப்பின் தொடக்கத்தில் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள், முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த காலத்தில் தங்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனம் திறந்து பேசுகின்ற பழக்கமுடையவர்கள் நாங்கள்..  அதுபோல் தங்களை பள்ளிக்கல்வித் துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்த போது எங்களுடைய கடுமையான எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்து, வெளிப்படையாக செய்திகளை வெளியிட்டதை தாங்கள் பார்த்திருப்பீர்கள்!.. பள்ளிக் கல்வித்துறையில் உ.பி மாடல் கல்வி கொள்கை நிர்வாகக்  கட்டமைப்பினை, உத்தரபிரதேச மாநிலத்தை சார்ந்த ஒருவர், எங்களுடைய எதிர்ப்பினை அலட்சியம் செய்துவிட்டு அமல்படுத்தி  சென்றுவிட்டார். திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன்  முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளராக தாங்கள் கல்வித்துறையில் பொறுப்பேற்று   இருக்கின்ற போது ஓராண்டு காலம் ஆகியும் அதை ரத்து செய்யவில்லை என்ற வருத்தம் தான் எங்களிடம் இருந்தது.  வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை. மேலும் எங்களைப் பொறுத்த வரையில் ஆசிரியர்களின் நலனை மையப்படுத்தி  இயக்கம் நடத்தி வருகிறவர்கள்.  தலைவர் கலைஞர் அவர்கள் காலத்தில்  பெற்றுத்தந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்கு வங்கிக்கு அலுவலர்களால் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதில் தான் நாங்கள்  உணர்ந்து வேதனையுறுகிறோம். என்று மனம் திறந்து வெளிப்படுத்தினோம்.  முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்களும் மனம் திறந்து வெளிப்படைத்தன்மையுடன் நம்மிடம் கலந்துரையாடினார்கள். மிக விரைவில் பள்ளிக்கல்வித்துறையில் நமது பழைய நிர்வாக கட்டமைப்பு அமையும் என்பதை பக்குவ உணர்வுடன் நம்மிடம் தெரிவித்தார்கள்.*


 *🔹18 லட்சம் பேர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அகவிலைப்படியை ஜூலை மாதத்திற்குள் நாம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய போது, அதுவும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்பதற்கான அசைவுகளை தெரிவித்தார்கள்..*


 *🔹10.03.2020 அதற்கு முன்னர் உயர்கல்வித் தகுதி முடித்தவர்கள் ஊக்க ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான அரசாணையை நிதித்துறை  வெளியிட்டு விட்டது. ஆனால் இன்னும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவில்லை என்று தெரியப்படுத்தினோம். விண்ணப்பத்தில் உள்ளவாறு கலந்து பேசுவதாக தெரிவித்தார்கள்.*


 *🔹ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு ஆசிரியர் நியமனம் செய்யலாம். அரசாணை 149 ஐ  இரத்து செய்துவிட்டு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யலாம், என்ற கருத்தினையும் நாம் வலியுறுத்தினோம். நீங்கள் தெளிவாக தொகுத்து கொண்டு வாருங்கள் அதிலும் பிரச்சனைகள் இருக்கிறது, கலந்து பேசுவோம்..  என்று பதில் கூறினார்கள்.*


*🔹அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சட்ட பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதை அண்ணன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். முதன்மைச் செயலாளர் அவர்களும் உணர்ந்து அது குறித்து கருத்து தெரிவித்தார்கள்.*


*🔹100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் ஒர் ஆசிரியர் தான் பாடம் நடத்தி வரும் வேதனையான நிலைமை   இன்னமும் தொடர்கின்றது.  ஆய்வுக் குழுவினர் இதுபோன்ற பள்ளிகளுக்கும் சென்று பார்வையிட்டால் தான் உண்மை நிலை அறிய முடியும்.  மேலும் பள்ளிகளில்  நடைபெறும் புள்ளிவிபர பணியினால்   மாணவர்களுக்கு  பாடம் நடத்த இயலவில்லை என்பதனை மாநில பொறுப்பாளர்கள் எடுத்துரைத்தார்கள்..*


*🔹EMIS இல் ஏற்படுகின்ற தொல்லைகளை நேரலையாக விவரித்து கூறினோம். முதன்மைச் செயலாளர் அவர்கள், EMISஇல் சிரமங்கள்  இருந்தாலும் ஆசிரியர்களுடைய மாறுதல் கலந்தாய்வில் எவ்வித ஊழலுக்கும் இடமளிக்காமல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது என்பதை கேள்விப்படுகிற போது எங்களுக்கு பெருமையாக உள்ளது  என நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். நாமும் அனைத்து வகை ஆசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல்களும், ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் சிறப்பாக நடந்து வருகிறது என்பதை பெருமித உணர்வுடன்  பகிர்ந்து கொண்டோம். நான் அலுவலர்களிடம் பேசுகிற போதெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால்  ஆசிரியர்களைத்தான் நாம் ஊக்கப்படுத்த வேண்டும்; அவர்கள் மனநிலை பாதிக்க கூடிய வகையில் அலுவலர்கள் நடந்து கொள்ளக் கூடாது;  ஆசிரியர்களை நம்பி தான் அரசு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தவறு செய்கிற ஆசிரியரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர தண்டனை அளிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்ற இதய பற்றுதலை நம்மிடம் தெரிவித்துக் கொண்டார்கள். சங்கங்கள் அரசுப் பள்ளிகளை  சவாலாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் கல்வித்தரம் உயர பாடுபட வேண்டும் என்று உரிமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..*


 *🔹பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி செயல்பட்டு வருவதை நாம்  தெரிவித்த போது, அவரை அழைத்து பேசுவதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.*


 *🔹பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்துதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், முன் அனுமதி பெறாமல் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பின்னேற்பு ஆணை வழங்குதல்,  சரண்  விடுப்பு பணப்பலன் வழங்குதல், பி.லிட்.பி.எட்., நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் உள்பட தீர்வு காண வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய  விண்ணப்பத்தினை அளித்து தீர்வுகாண கேட்டுக்கொண்டோம்..*


*அக்கறை உணர்வுடன் நமது கோரிக்கை விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்கள். முதன்மைச் செயலாளர் அவர்கள் முதிர்ந்த பக்குவத்தினை பெற்றிருப்பதை  அவரது செயல்பாடுகள் மூலம் நம்மால் உணர முடிந்தது...*


 *சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு பயனுள்ள இனிய சந்திப்பாக நடைபெற்றது. இந்த இனிய அணுகு முறையுடன் கூடிய  சந்திப்பு என்றும் தொடரும்.. என்ற நம்பிக்கை உள்ளது...*


 *நன்றி பாராட்டுதல்களுடன்..*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*

*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.*

No comments:

Post a Comment