Friday, August 2, 2024

பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - கலந்தாலோசனைக் கூட்டம்.....

இன்று (02.08.2024) ல் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பபட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு பற்றி கலந்தாலோசித்து, விவாதிக்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, இன்றைய கூட்டத்தின் முக்கியமான நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் பணிகள், உறுப்பினர்கள்களின் தகுதி ஆகியவை பற்றி விரிவாக விளக்கி, இம்மாதம் 31ஆம் தேதி புதியதாக தேர்வு வேண்டிய பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான உறுப்பினர்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் கலந்தாலோசித்து புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை ஒருமனதாக பரிந்துரை செய்தனர். அதன்படி இப்பள்ளிக்கு 24 பேர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளர். இதன் அடிப்படையில் பதிய பள்ளி மேலாண்மைக் குழு அமையும். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் பூ.இராம்குமார், கோ. ஆனந்தன், மா.யோகலட்சுமி, மு. அனிதா, கணிணி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

Wednesday, July 31, 2024

5 ரூபாய்க்கு தேநீர், யாரை அவமதிக்கிறது கல்வித் துறை..... ஆசிரியர்களையா, பெற்றோர்களையா.....

அனைத்து அரசு துவக்க / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு எனும் நிகழ்வு இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. அதன் முதல் நிகழ்வு வரும் 02.08.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுமையும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் கலந்தாலோசனைக் கூட்டமும், தொடர்ந்து 10.08.2024, 17.08.2024, 24.08.2024, 31.08.2024 ஆகிய நாட்களில் 4 கட்டமாக பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களும் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு தனியாக அரசாணையே வெளியிட்டு உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து பெற்றோர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலையாயப்பணியாகும். இக்கூட்டங்களில் பங்கு பெறும் அனைத்து பெற்றோர்களுக்கும் தேநீர் வழங்கிட கல்வித்து றையால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. எவ்வளவு தெரியுமா, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பெருந்தொகை, ஆம் ஆளுக்கு 5 ரூபாய் வீதம் தேநீர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது ஏதோ கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட செயல்முறைக் கடிதம் அல்ல 30.07.2024ல் போடப்பட்ட கடிதம்தான். இன்றைய காலகட்டத்தில் 5 ரூபாய்க்கு எங்கே தேநீர் கிடைக்கும், ஒதுக்கீடு செய்தவர்களுக்கே இது வெளிச்சம். அவர்கள் இந்த உலகத்தில்தான் உள்ளார்களா? தெரியவில்லை. இதன் மூலம் கல்வித்துறை யாரை அவமதிக்கிறது என்பதுதான் இப்போதைய சந்தேகம். செலவினத்தை மேற்கொள்ள உள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களையா? அல்லது கூட்டத்திற்கு பங்கேற்க வ்ரும் பெற்றோர்களையா.......

Tuesday, July 30, 2024

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு.... 31.07.2024 முதல் EMIS வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்....

வருமான வரி கணக்கில் தவறான தகவல் அளித்து 'ரீபண்டு' பெற்றால் நடவடிக்கை பாயும் - வருமான வரித்துறை எச்சரிக்கை.......

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, 'ரீபண்டு' பெறுவதற்காக தவறான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது. தவறான தகவல் தருவது அல்லது தகவலை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்' என, வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கடந்த 2023 - 24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், இம்மாதம் 31ம் தேதி. இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை மற்றும் அதை நிர்வகிக்கும் மத்திய நேரடி வரி வாரியம் ஆகியவற்றின் தகவலின்படி, இதுவரை, ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இதில், மூன்றில் இரண்டு பங்கினர், புதிய நடைமுறையின்படி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வருமான வரி விதிகளின்படி, தற்போது, இரண்டு நடைமுறைகள் உள்ளன. பழைய நடைமுறையின்படி, வரி அடுக்கு மற்றும் அதற்கான வரி விகிதம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும். புதிய நடைமுறையின்படி, வரி அடுக்கு குறைவாக இருப்பதுடன், வரி விகிதமும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், இதில் வரிச்சலுகை கோர முடியாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய நடைமுறைக்கு பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இது நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தாக்கலில் நடைமுறைக்கு வரும். 'ரிட்டர்ன்' எனப்படும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஜூலை, 31ம் தேதி கடைசி நாள். கடந்தாண்டில் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களில், மீதமுள்ளவர்கள் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் சமீபத்தில், சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ரீபண்டு எனப்படும் பிடித்த வரியை திரும்ப பெறுவதற்காக சில தகவல்களை அளிக்கின்றனர். இதற்காக பொய்யான தகவல்களை அளிப்பது அல்லது தன் வருவாயை குறைத்துக் காட்டுவது போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். ரீபண்டு கேட்பவர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. அதில் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். அதிலும் திருப்தி இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சரியான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே கணக்கு தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, ரீபண்டு அளிக்கப்படும். தவறான தகவல் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வரிச்சான்று -- அரசு விளக்கம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வெளிநாட்டுக்கு பயணம் செய்வதற்கு, வரி பாக்கி இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:இந்த உத்தரவு அனைவருக்கும் அல்ல. வரிச் சட்டத்தின்படி, அதிக வரி நிலுவை வைத்துள்ளவர்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். வரி பாக்கியை வசூலிக்கவும், நிதி மோசடி செய்து வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கவும், கருப்புப் பணச் சட்டத்தின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, July 26, 2024

பள்ளி அளவிலான சதுரங்க போட்டி....

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சதுரங்கப் போட்டியின் விதிமுறைகளை அனைவருக்கும் விளக்கி போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டிகள் 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக நடைபெற்றது. அதில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் தா. யோகேஸ்வரன், சே. நித்திஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ம. பூஜா, சே. ஸ்ரீவர்த்தனி ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்கள் பிரிவில் ம. குரு, க. நவீன்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் கோ. அகிலா, தா. தாரணி ஆகியோரும் சிறப்பிடம் பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வட்டார அளவிலான போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர். இவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, கணினி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.