Saturday, May 23, 2015

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

               விருதுநகர்: அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, கற்றல் திறன், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த தமிழக அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 அரசு பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்கள்’ அமைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ‘மாடர்ன் பள்ளியாக’ அரசு பள்ளிகள் செயல்பட உள்ளன. ஒரு பள்ளியில் ஆசிரியர் எடுக்கும் பாடம் இந்த முறை உள்ள மற்ற பள்ளிகளிலும் பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் இவ்வசதி துவங்க உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை என 53,772 பள்ளிகள் உள்ளன. இதில், 36,962 மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் 5 லட்சத்து 20,532 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஒரு காலத்தில் அரசு பள்ளிக்கென்று இருந்த கம்பீரம் கடந்த சில ஆண்டுகளாக காற்றில் பறந்துக் கொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் வசதிகள், பாடமுறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் குறைந்து வருகிறது. கிராமங்களில் வசிப்பவர்கள், ஏழை, எளிய மக்கள் மட்டுமே தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் சத்துணவு, காலணிகள், சைக்கிள், பாடபுத்தகங்கள், லேப்டாப் என வழங்கினாலும் மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளிகள் பின்தங்கியே உள்ளன. பல இடங்களில் ஆசிரியர் எண்ணிக்கையை விட மாணவர்கள் குறைவாக(!?!) இருக்கும் அரிய சம்பவமும் நடந்து வருகிறது. ஒரு சில ஊர்களில் அரசு பள்ளிகளை மாணவர்களின்றி பூட்டும் கொடுமையும் நடந்து வருகிறது. இந்த முறையை மாற்ற தற்போது ஸ்மார்ட் கிளாஸ் ஒரு சில அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
      அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதை தடுக்கும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவில்ைல. தனியார் பள்ளிகளில் கம்ப்யூட்டர் மூலம் கற்பிக்கும் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் என அடுத்தடுத்து நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து முதல்கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ‘விருட்சுவல் கிளாஸ் ரூம்’ அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவைகள் இந்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விருட்சுவல் வகுப்பறைகளில் கம்ப்யூட்டர்கள், ஹெட்போன், புரஜெக்டர் உள்ளிட்ட கணினி சார் உபகரணங்கள் இருக்கும். இந்த வகுப்பறைகளில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும். மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் குறைதீர் கற்றல்முறை வழங்கப்படும். வீடியோ மூலம் பாடங்கள், பாடப்பொருட்கள் வடிவமைத்தல் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும். இந்த வசதி உள்ள வகுப்பறையில் இருந்து எடுக்கப்படும் பாடத்தை, இதே வசதி கொண்ட மற்றொரு வகுப்பறையில் உள்ள மாணவர்களும் கற்கலாம். உதாரணத்திற்கு, மதுரையில் எடுக்கப்படும் ஒரு பாடத்தை, அதே நேரம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பயிலும் விதத்தில் நவீனமயமாக்கப்பட உள்ளது.
      இதுகுறித்து விருதுநகர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா 25 விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள 25 அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் விருட்சுவல் கிளாஸ் ரூம்கள் அமைக்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும், பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்கும்’ என்றார். இதுகுறித்து ஸ்டூடண்ட்ஸ் இயக்குனர் ராஜராஜன் கூறுகையில், ‘ஒரு காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தால்தான் கவுரவம் என்ற பெற்றோரின் மனநிலை மெல்ல, மெல்ல மாறி வருகிறது. கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து நல்ல மதிப்பெண் எடுக்க வைத்துவிட வேண்டும் என்னும் மனநிலை ஏழை பெற்றோரிடமே ஏற்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக தியாகம் செய்யும் ஆசிரியர்கள் சரளமாக குறைந்து விட்டனர். அரசு இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்’ என்றார்.
        அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்கள் சேர்க்கைைய அதிகப்படுத்த ஒரு சில அரசு பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், ஊராட்சி தலைவர்கள் நிதி திரட்டி கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றனர். தமிழக அரசு கூடுதல் அக்கறை காட்டும் பட்சத்தில் அரசு பள்ளிகளும் தனியார்களுக்கு ஈடு கொடுத்து முன்னேறும்’ என்றார்.

No comments:

Post a Comment