Saturday, August 31, 2024

பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - தேர்வுக் கூட்டம்.....

இன்று (31.08.2024) ல் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, மறு கட்டமைப்பு - தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னதாக பள்ளியின் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் இன்றைய கூட்டத்தின் முக்கியமான நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். அதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் பணிகள், உறுப்பினர்கள்களின் தகுதி ஆகியவை பற்றி விரிவாக விளக்கி, இன்று புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பள்ளியின் மேம்பாட்டுக்காகவும், மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் எவ்வாறெல்லாம் செயல்பட வேண்டும் எனக்கூறி அனைவரும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த பெற்றோர்கள் புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை ஒருமனதாக தேர்வு செய்தனர். அதன்படி இப்பள்ளிக்கு திருமதி க. புவணேஸ்வரி தலைமையில் 24 பேர் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் தேர்வுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இன்று தேர்வு செய்யப்பட்ட பதிய பள்ளி மேலாண்மைக் குழு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியேற்பு செய்து வைத்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா.யோகலட்சுமி, மு. அனிதா, கணிணி பயிற்றுநர் மு. அகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

Tuesday, August 27, 2024

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு..........

தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் இன்று 27.08.2024 வெளியிடப்பட்டது, அதில் தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். ராஜாகுப்பம் கோபிநாத், மற்றும் மதுரை முரளிதரன் ஆகியோர் ஆவர்...

Friday, August 16, 2024

78ஆவது இந்திய சுதந்திரத் திருநாள் விழா......

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2024) *இந்தியத் திருநாட்டின் 78ஆவது சுதந்திரத் திருநாள் விழா* மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக காலை 9.00 மணிக்கு பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் சாரணர் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சீருடையிலும் பள்ளிச் சீருடையிலும் கலந்துக் கொண்டனர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், மா. யோகலட்சுமி, மு.அனிதா, மு. அகிலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் விஜயகுமாரி பிரகாஷ் ஆகியோரும் , முன்னாள் மாணவரும் இந்நாள் பெற்றோரும் ஆகிய மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் விழாத் தலைமை உரையாற்றிய பள்ளித் *தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் இன்றைய சிறப்பு நிகழ்வான இந்திய சுதந்திர நாள் விழா பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரையிலான தியாகம்* பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி அவற்றில் ஒரு சிறு அளவிலேனும் நாம் பங்காற்றி இன்றைய நமது சமூகத்தை காத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேச்சு (தமிழ், ஆங்கிலம்), கவிதை, கட்டுரை, பாடல்கள் ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தத்தம் திறமைகளை விழா மேடையில் வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் *மாணவர்கள் பல வண்ண ஆடைகளோடு வந்து கிராமியம், தேசியம், தேசபக்தி ஆகிய தலைப்பிலான பாடல்களுக்கு நடனம் ஆடி* அனைவரையும் மகிழ்வித்தனர். அடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கலை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்துக் கொண்டனர். அனைவருக்கும் முன்னாள் *மாணவர்கள் இனிப்பு(லட்டு), பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானம், மன்ச் இனிப்பு வகை* ஆகியவற்றை வழங்கினர்.