Saturday, December 28, 2013

500 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்




        சென்னை : தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.1300 கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற உள்ளது.தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மத்திய இடைநிலை கல்வி திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம். இதை செயல்படுத்தும் நோக்கமாக 8ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் நடுநிலை பள்ளிகளையும் தரம் உயர்த்தி 9ம் வகுப்பில் தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

             முதற்கட்டமாக கடந்த 2009-2010ம் ஆண்டில் 200 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 2010-2011ம் ஆண்டு 344 நடுநிலைப்பள்ளிகளும், 2011-2012ம் ஆண்டில் 710 நடுநிலை பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 9ம வகுப்பில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, வகுப்பறைகள் கட்டுவது உள்ளிட்ட வசதிகளை செய்ய கடந்த ஆண்டு மத்திய அரசு ரூ.510 கோடி நிதி வழங்கியது.

          இந்நிலையில், தற்போது தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 8 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் 500 பள்ளிகளை தரம் உயர்த்த உள்ளதாக ஆர்எம்எஸ்ஏ இயக்ககம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது. மேலும், தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகள் குறித்த விவரங்கள் அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய ரூ.1300 கோடி நிதி தேவைப் படும் என்று கணக்கிட்டுள்ளது. இதுதொடர்பாக, வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி டெல்லியில் நடக்க உள்ள திட்ட மதிப்பீட்டுக் குழுவில் தமிழக அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆர்எம்எஸ்ஏ திட்ட இயக்ககம் சார்பில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு தமிழகத்துக்கான நிதி தேவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

நன்றி : தினகரன்

No comments:

Post a Comment