Friday, January 10, 2014

நாட்டில் புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

         நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், புதிதாக 10,000 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது மொத்தமாக, அரசு கல்லூரிகளில் மட்டும் 22,500 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன.
        இந்தியாவில், அரசு மற்றும் தனியார் என சேர்த்து, மொத்தம் 381 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட 50,000 இடங்கள் உள்ளன. நாட்டில், தற்போதைய நிலையில், 2,000 நபர்களுக்கு 1 மருத்துவர் என்ற நிலை உள்ளது.
               ஆனால் அதை, 1,000 பேருக்கு 1 மருத்துவர் என்பதாக மாற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது. மேலும், தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளிலும், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஏனெனில், அப்பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.
          மத்திய மற்றும் மாநில மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான, மத்திய நிதியுதவி திட்டம் தொடர்பாக, இந்திய சுகாதார அமைச்சகத்தால், ஒரு செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10,000 கோடி செலவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
           இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7,500 கோடிகள். மாநில அரசுகளின் பங்கு ரூ.2,500 கோடிகள். வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, இதற்கான நிதிப் பகிர்வு விகிதாச்சாரம் 90:10 என்ற அளவில் இருக்கும்.
               ஒரு MBBS இடத்திற்கான தோராயமான மொத்த முதலீடு ரூ.1.20 கோடி. MBBS இடங்களை இந்தளவு அதிகரிப்பது இதுவரை நாட்டில் நடக்காத ஒன்றாகும்.
       மத்திய அரசின் உதவியுடன், மாநிலங்களில் 58 புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கும் சுகாதார அமைச்சகத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலமாக, 5,800 புதிய MBSS இடங்களை உருவாக்க முடியும்.
           கடந்த 2000ம் ஆண்டிலிருந்து, சுமார் 9,300 புதிய MBBS இடங்களை அரசு உருவாக்கியுள்ளது. இந்த எண்ணிக்கை, 1950 - 2000 ஆகிய காலத்திற்கு இடைபட்ட 50 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டதை விட அதிகம்.

No comments:

Post a Comment