Friday, January 10, 2014

4340 பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்: - அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு

          பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் அறிவித்தது. அதை 2 பிரிவுகளாக பிரித்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டது. முதல் பிரிவில் 1329 தொடக்க பள்ளிகளில் தனியார் கம்ப்யூட்டர்கள் அமைப்பதற்கும், கம்ப்யூட்டர் மற்றும் கருவிகள் பொருத்தவும் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

        இந்த பிரிவின் கீழ் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 95,470 மாணவர்கள் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக இந்த பிரிவின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளனர். 

         2வது பிரிவில் பள்ளிகளில் தவகல் தொழில்நுட்ப திட்டம்(ஐசிடி) செயல்படுத்தப்பட உள்ளது. அதில் மத்திய அரசின் பங்காக 75 சதவீதமும், மாநில அரசின் பங்காக 25 சதவீதமும் செலவிடப்பட உள்ளது. இந்த தகவல் தொடர்பு திட்டம் 4,340 அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். அதாவது ‘உருவாக்கி, உரிமையாக்கி, இயக்கி மாற்றுதல்’ என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். 

           பள்ளிகளில் கம்ப்யூட்டர் லேப்கள் அமைக்க தனியாருக்கு டெண் டர் விடப்படுகிறது. அவர்களே   அந்த லேப்களில் தலா ஒரு ஆசிரியரை நியமித்துக் கொள்வார்கள். 5 ஆண்டு களுக்கு   அந்த  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பிறகு, அரசிடம் ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். இதற்கான டெண்டரை அரசு கடந்த வாரம் வெளியிட்டது. ஒரு லேப் அமைக்க குறைந்தபட்ச தொகையாக ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் நிர்ணயம் செய்துள்ள னர். இதைத்தொடர்ந்து பல கம்ப்யூட்டர் நிறுவன ங்கள் டெண்டர் எடுக்க போட்டி போடுகின்றன.

            தற்போதுள்ள அரசின் சில திட்டங்களுக்கு கம்ப்யூட்டர்களை பொருத்திய சில நிறுவனங்களில், 2 கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மீது அரசு அதிருப்தியில் உள்ளது. ஆனால் அந்த 2 கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மேற்கண்ட டெண்டர் எடுக்க களத்தில் இறங்கியுள்ளன. அந்த 2 நிறுவனங்கள் கையில் மேற்கண்ட திட்டம் போனால், இந்த திட்டமே சீர்குலைந்துவிடும் என்று அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். 27 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறப்போகும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.277 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த டெண்டர் விண்ணப்பங்கள் 31ம் தேதி பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment